அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

13 வது திருத்த சட்டம் தீர்வு ஆகாது: அதிகாரப் பகிர்வே தமிழரின் இலக்கும் இறுதித் தீர்மானமும்!- தமிழ் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம்

Go down

13 வது திருத்த சட்டம் தீர்வு ஆகாது: அதிகாரப் பகிர்வே தமிழரின் இலக்கும் இறுதித் தீர்மானமும்!- தமிழ் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் Empty 13 வது திருத்த சட்டம் தீர்வு ஆகாது: அதிகாரப் பகிர்வே தமிழரின் இலக்கும் இறுதித் தீர்மானமும்!- தமிழ் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம்

Post by rajeshwary Mon Mar 07, 2011 10:15 am

அரசமைப்பின் 13 வது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாகவோ அடிப்படையாகவோ அமையமுடியாது. அதற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிப்பின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்றைக் குறித்த ஒரு காலகட்டத்தினுள் எட்டவும் அதனை நடைமுறைப்படுத்தவும் நாம் இடையறாத தீர்க்கமான தீர்மானத்தைக் கொண்டுள்ளோம்.
இந்த முயற்சிகளுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினதும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினதும் அனுசரணை உண்டு என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) நேற்று வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இத்தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார்.

இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

இலங்கையில் 2010 ஏப்ரல் திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் ஒன்றுக்கு முகங் கொடுக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எம்மக்கள் பேரவல வாழ்வை ஒருகணம் எண்ணிப்பார்ப்போம்.

01. தமிழ் மக்களின் பேரவல வாழ்வு:

குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்த மக்கள் ஆழிப் பேரலைக்குள் மூழ்கி அந்த அழிவிலிருந்தும், பேரவலத்திலிருந்தும் ஐந்து ஆண்டுகளாகியும் மீட்சி கொள்ளவில்லை. போர் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்த போதிலும் தமிழ்ப் பிரதேச மக்கள் அந்தப் பேரவலத்திலிருந்து 22 மாதங்கள் கடந்த பின்னரும் மீளமுடியவில்லை. தங்கள் வாழ்விடங்களில் முழுமையாக மீள் குடியமர்த்தப்படவில்லை. வாழ்வாதாரங்களைத்தானும் மீளக்கட்டியெழுப்ப முடியவில்லை.

போர் முடிந்துவிட்டதென்ற செய்தியை விட அந்த முடிவின் விளைவுகள் பாரதூரமானவையாகவுள்ளன. அதன் விளைவுகள் வரலாற்று ரீதியான பாரம்பரியம் மிக்க தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளங்களையும், அத்திவாரத்தையும் அழித்தும், தகர்த்தும் வருகின்றன.

இரண்டாவது உலகப்போர் முடிவடைந்தும் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் வீசப்பட்ட அணுகுண்டுகளின் விளைவுகள் இன்று வரை மனித குலத்தின் கருவறை வரை பாதிப்பை ஏற்படுத்தி வருவதைப் போன்று இலங்கையில் வன்னிப் போரின் முடிவுகள் தமிழ் மானிடத்தையும் அதன் ஆன்மத்தையும் பாதித்து வருகின்றமையை நாம் அனுபவித்து வருகின்றோம்.

அரை நூற்றாண்டிற்கும் மேலான பேரினவாத சித்தாந்தப் பரிணாமத்தினாலும், விரிவாக்கப்பட்ட அதன் அடிப்படையிலான ஆட்சி, அதிகார இராணுவ நிர்மாணத்தினாலும் தமிழ்மொழி, கலை, பண்பாடு மற்றும் வாழ்விடங்கள் சிதைக்கப்படுகின்றன.

பெரும்பான்மைத்துவ செறிவைக் கொண்ட தமிழ் மக்களின் கட்டமைப்பையும், குடிமக்கள் பரம்பலையும் மாற்றியமைக்கும், சிறுபான்மைப்படுத்தும் விதத்தில் அரசின் நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எங்கும் எதிலும் இராணுவத் தலையீடு

இராணுவப் பாதுகாப்புடன் இராணுவக் குடியிருப்புகளும் எங்கும் எதிலும் இராணுவத் தலையீடும், அரச நிறுவனங்களின் நிர்வாகம் இராணுவமயப்படுத்தப்படுதலும், சிங்களக் குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும், புத்த சமய சின்னங்களின் பரம்பலினால் பௌத்த மயமாக்கலும் பொருளாதாரச் சுரண்டல்களும், சூறையாடல்களும் தாராளமாகவே தமிழ் பேசும் மக்களிடத்திலும் வாழ்விடங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

02. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடப்பாடு

இவற்றிலிருந்து தனித்துவமிக்க தமிழ்த் தேசிய இனமும் அதன் மொழி, இன அடையாளங்களும், கலை, பண்பாடு உள்ளிட்ட வாழ்விடங்களும், அதன் அரசியல் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசரமும் அவசியமும் தமிழ்ப் பிரதேச மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

இதற்கான மீள்எழுச்சித் திட்டங்களுக்கான வேலைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஜனநாயக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றித் தமிழ்த் தேசிய இனத்தின் விடிவுக்கும், விடுதலைக்கும், தன்னாட்சிக்குமான இலக்குடன் எம்மக்கள் மத்தியில் வேலை செய்யவும் முன்னெடுக்கவும் வேண்டியுள்ளோம்.

03. மக்களின் தெளிவான தேர்வும் எமது நன்றியும்

இதன் அடிப்படையிலும் எதிர்நோக்கிலும் 2010ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலுக்கான எமது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டது. மனிதாபிமானம், மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள், சுயநிர்ணய உரிமைத் தத்துவம் உட்பட்ட அடிப்படை அரசியல் உரிமைகள் மீறப்பட்டிருந்த நிலைமைகளிலும் ஜனநாயக ஒளிக்கீற்று தென்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மக்கள் முன் எம்மை ஒப்படைத்துள்ளோம். மக்களுக்காக எம்மை அர்ப்பணித்திருக்கின்றோம். மக்களுக்கான அடிப்படை அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தும், போராடியும் உள்ளோம்.

இவ்வாறு ஜனநாயக ஒளிக்கீற்று தென்பட்ட 2010 பொதுத் தேர்தலிலும் தமிழ்மக்கள் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்குப் பெரும்பான்மையுடன் வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்தமைக்காக நாம் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பொதுத் தேர்தல் தீர்ப்புக்கு இந்தியாவும் சர்வதேசமும் வரவேற்பு

இப்பொதுத்தேர்தல் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்று அளித்த தீர்க்கமான தீர்ப்பானது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம், தமிழ் மக்களின் பற்றுறுதி மிக்க கொள்கைத் திட்டத்தையும் இலட்சியப் பற்றையும் அதனை நிறை வேற்றும் திடசங்கற்பத்தையும் தெட்டத் தெளிவாகவே வெளிப்படுத்தியிருந்தன. இதனை இந்தியா உள்ளிட்ட சர்வதேச அரசுத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களும் நேரடியாக வரவேற்றன.

மேலும் குறிப்பாகக் கிழக்குப் பிரதேசத் தமிழ் மக்கள் சென்ற பொதுத் தேர்தலில் (2010) தெளிவான தீர்க்கமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்பதையும் குறிப்பிடவேண்டும். அரசு தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வடக்கிலிருந்து, கிழக்கைப் பிரிக்கும் நடவடிக்கையை எடுத்திருந்த பொழுதிலும் நாம் ஒரே தாய் மக்கள், ஒரே தமிழர் தாயக மக்கள், நாம் இதயபூர்வமாய் உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் ஒன்று பட்டு நிற்கிறோம்'' எனும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இவற்றிற்காக எம் மக்கள் மீதான விசுவாசமும் நன்றியும் எம் நெஞ்சமெல்லாம் பூரித்து நிற்கின்றது.

இதன் பால் தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தையும் தனித்துவத்தையும் மக்களிடமே உரித்தாயுள்ள இறைமையையும், சுயநிர்ணய உரிமைத்தத்துவத்தையும் வாழ்வுரிமையையும் பேணிப் பாதுகாக்கும் உரிமையும் பொறுப்பும் அனைத்து மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வடக்கு, கிழக்கு தாயகப் பிரதேசத்தில் அவர் தம் வாழ்விடத்தில் தம்மைத்தாமே ஆளும் அடிப்படை உரிமையைப் பிரயோகித்து, தன்னாட்சியை நிறுவவும், நிலைநாட்டவும், பாதுகாக்கவும் தமிழ் மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதியான பற்றையும், கடப்பாட்டையும், திடசங்கற்பத்தையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நிரூபித்ததைப் போன்று இந்த உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். இது மக்களுக்கு உரித்தான ஜனநாயகக் கடமையாகும்.

இவ்வாறு ஜனநாயக விழுமியங்களுக்கூடாக மக்களை அணி திரட்டுவதும் அடிமட்டத்திலிருந்தும் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதும் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் கொள்கை மற்றும் தீர்மானங்களையும் வென்றெடுப்பதற்காகவேதான்.

இதன் பொருட்டு மனிதாபிமானப் பணிகளில் ஸ்ரீலங்கா அரசுடன் சுமுக உறவைப் பேணுவதுடன் தேசிய மற்றும் உள்ளூர் ஆட்சி அரசியல் மற்றும் அபிவிருத்தியில் இக்கால கட்டத்திலும் வெற்றிகரமாகச் செயற்பட முடியுமென்பதை உறுதிப்படுத்தும் தேர்தலாக இதனை நாம் நோக்குகின்றோம்.

04. அரசுடன் பேச்சு

இதன் காரணங்களின் அடிப்படையில் இன்று பலமிக்க முழு நிர்வாக அதிகாரத்தையும், நாடாளுமன்றப் பெரும்பான்மைத்துவமிக்க பலத்தையும் கொண்ட ஜனாதிபதியும், அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் பேச்சுகளைத் தொடக்கியுள்ளமையை அறிவீர்கள். அப்பேச்சுக்களில்

1. இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் எனும் பெயரிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் மீட்கப்படுதல்.(வலி வடக்கு, சம்பூர் உள்ளிட்ட பிரதேசங்களிலும் வன்னியிலும், கிழக்கிலும்) தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேறுதல், வாழ்வாதாரங்களின் மீள்கட்டுமானம், மீள் நிர்மாணம், சரணடைந்தவர்கள், காணாமல்போன இளைஞர், யுவதிகள் மற்றும் நீண்டகாலம் நீதிமன்றக் காவலில் சிறைகளிலுள்ளோர் விடுதலை மற்றும் புனர்வாழ்வு,

2. நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வு என்பன தொடர்பாகவே பேச்சுகள் இடம்பெறுகின்றன. இதன்பொருட்டு தமிழ் மக்களினதும், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் கட்சிகளுடனும், பிரதிநிதிகளுடனும் பேச்சுகள் நடத்தி அரசியல் தீர்வு ஒன்றுக்கான ஒன்றுபட்ட அடிப்படைக் கொள்கைத்திட்டமொன்று உருவாக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதையும் அறிவீர்கள்.

13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவோ, அடிப்படையாகவோ அமைய முடியாது. அதற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிப்பில் அடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்றைக் குறித்த ஒரு காலகட்டத்தினுள் எட்டவும் அதனை நடைமுறைப் படுத்தவும் நாம் இடையறாத தீர்க்கமான தீர்மானத்தைக் கொண்டுள்ளோம். இந்த முயற்சிகளுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினதும், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினதும் அனுசரணை உண்டு என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

அரசுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சின்பொழுது,

1. உயர் பாதுகாப்பு வலயம்

2. மீள்குடியேற்றம்

3. சிறைகளிலும் புனர்வாழ்வு நிலையங்களிலும் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் தொடர்பில் அரசு எழுத்து மூலம் எமக்கு ஓரளவு சாதகமான பதிலைத் தந்துள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசை வற்புறுத்தி வருகின்றோம்.

நாம் எடுத்துவரும், ஈடுபட்டு வரும் இந்த முயற்சிகளுக்கு எம் தமிழ் மக்கள் பூரணமான ஒன்றுபட்ட ஆதரவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலிலும் வழங்க வேண்டும் எனத் தங்கள் பாதம் தொட்டு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

05. தரகு அரசியல் முகமும் தமிழர் பிரதிநிதிகள் புறக்கணிப்பும்

எம் தமிழ் மக்கள் சென்ற பொதுத் தேர்தலில் தெளிவான, தீர்க்கமான ஒரு தீர்ப்பை வழங்கிய பொழுதிலும் ஜனநாயக நெறி முறைகளுக்கு மாறாக அரசின் இன்னொரு முகம் தரகர்களையும் அமைச்சர்களையும் தமிழ்ப் பிரதேசத்தில் நியமித்து தமிழ் மக்களிடையே அபிவிருத்தியென்ற போர்வையில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதையும் அறிவீர்கள்.

முகாம்களிலிருந்த எம் மக்களைப் பார்வையிடக் கூட ஓராண்டுக்கும் மேலாக அரசு எம்மை அனுமதிக்கவில்லை என்பதையும் அறிவீர்கள். அந்த அகதி மக்களை மீள்குடியேற்றம் என்று காடுகளுக்குள் கொண்டு போய் விட்ட பொழுதுதான் அந்த மக்களைப் பார்க்க முடிந்தது. எம்மக்கள் கண்ணீரைத் துடைக்கவும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடமும், இராஜதந்திரிகளிடமும், புலம்பெயர்ந்த மக்களிடமும் மனிதாபிமான உதவிகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைத்துவம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துப் பேச்சு நடத்தியது.

தரகு அரசியலை மக்கள் நிராகரிக்கவேண்டும். அவ்வாறு கிடைத்த மனிதாபிமான உதவிகளை மக்களுக்கு வழங்கும்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் புறக்கணிக்கவும் தரகு அரசியல்வாதிகளை முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அறிவீர்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டும் அதேவேளை, இத்தகைய தரகு அரசியலை எம் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கின்றோம்.

06. ஜனநாயக விழுமியங்களைப் பேணும் பொறுப்பு

இத் தேர்தலின் மூலம் நீண்ட காலம் நடைமுறையற்றிருந்த ஜனநாயக விழுமியங்களை மீளப் பேணவும், உள்ளூர் அரசியல் தலைமைத்துவத்தை அத்திவாரத்திலிருந்து கட்டியெழுப்பவும், உள்ளூர் அபிவிருத்தி நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரசபை மூலம் முன்னெடுக்கவும் தேவையான அரசியல் ஜனநாயக அதிகாரத்தையும், உரிமையையும் எம்மக்கள் பெற முடியுமென அறுதியிட்டுக் கூறுகின்றோம்.

07. உள்ளூர் அதிகார சபைகளுக்கு அதிகாரம்:

அடிமட்டத்திலுள்ள உள்ளூராட்சி அதிகாரசபைகள் கல்வி, சுகாதாரம், தாய் சேய் நலம் பராமரிப்பு, வாழ்விழந்த பெண்கள் மேம்பாடு மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அதிகாரங்களும், மூலவளங்களின் பயன்பாடு உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களின் மீது திட்டமிடல், அபிவிருத்தி செய்தல், வேலை வாய்ப்பு வழங்கல் என்பன மீது அதிகாரங்களும், நிதி மூலங்களும், ஒதுக்கீடுகளும் என்பன பற்றியும் எதிர்காலத்தில் சட்ட அதிகாரமுள்ள சபைகளாக உள்ளூர் அதிகார சபைகள் வலுவடையவும் முயற்சிகள் எடுக்கப்படும்.

உள்ளூர் அதிகார சபைகளுக்கு மேலும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு (உதாரணமாக இங்கிலாந்தின் "கவுன்ரி கவுன்ஸில்" முறை உள்ளிட்ட ஏனைய தேசங்களில் உள்ளவாறும்) நாம் நடவடிக்கை எடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

9. ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றப் பிரதேசத்தினது தேவைகளையும், அபிவிருத்திப் பணிகளையும் இனங்கண்டு அவற்றை நிறைவேற்றும் வகையிலே ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்துக்கான நோக்கங்கள், இலக்குகள் என்பனவற்றைத் தனித் தனியாக வாக்காளப் பெருமக்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். அதற்குத் தேவையான பொருத்தமான நிபுணத்துவத்தையும் திரட்டி வழங்கவும் எண்ணங் கொண்டுள்ளோம்.

10. கடந்த 60ஆண்டுகளுக்கு மேலாக நாம் முன்னெடுத்து வரும் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கவும், வலுச்சேர்ப்பதற்கும், இந்த நாட்டிலேயே எமது உள்ளூராட்சி மன்றங்கள் மீண்டும் முதன்மை நிலையைப் பெற்றுக்கொள்ளவும் வழி வகுக்கவேண்டும்.

11. எனவே தமிழ் மக்களின் இலட்சியச் சின்னம் வீட்டுக்கு நேரே புள்ளடியிட்டும், அத்துடன் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்குத் தங்கள் விருப்பு வாக்குகளை வழங்கியும் சகல உள்ளூராட்சி அதிகாரசபைகளிலும் எமது அணிகளை வெற்றி பெறச் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களுக்கு உரித்தான ஒவ்வொரு வாக்கையும் தவறவிடாது அதிகாலையிலே எழுந்து உரிய வாக்களிக்கும் நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதைத் தங்கள் உரிமையை கடமையை உறுதி செய்து வெற்றிபெறுமாறு இரு கரங்கூப்பி வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறு அவ் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிகாரப் பகிர்வு யோசனைகளை த.தே.கூட்டமைப்பு ஏப்ரலில் முன்வைக்கும் - மாவை எம்.பி தெரிவிப்பு
» த. தே கூட்டமைப்புடனேயே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். - த.தே.ம முன்னணி
» தமிழ் தேசத்தாய் பார்வதியம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துமாறு மக்களுக்கு அழைப்பு - த.தே. கூட்டமைப்பு
» கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
» முன்னாள் போராளிகள் மீது பழியை சுமத்திவிட்டு உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum